ஜூலை 23 இந்திய நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்காக எண்ணற்ற அடக்கு முறைகளை சந்தித்து உயிர் நீத்த கவிஞரும், எழுச்சி கொள்ளச் செய்யும் உரைகளை நிகழ்த்தி யவருமான மகத்தான தியாகி சுப்பிரமணிய சிவாவின் நினைவு தினம். 1884 அக்டோபர் 4-ல் இன்றைய திண்டுக்கல் மாவட்டம் வத்தலக் குண்டில் பிறந்தவர். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து தனது சிறுவயதிலேயே மதுரையிலும் கோவையிலும் கல்வி கற்றுக் கொண்டார். வறு மையின் காரணமாக இலவச உணவு கிடைக்கும் திருவனந்தபுரம் சென்று படித்து முடித்தார். தமிழ் ஆங்கிலம் என கற்றுத் தேர்ந்திருந்தார். தான் படித்த படிப்பை வைத்து சிவகாசியில் போலீஸ் துறையில் எழுத்தராகப் பணியாற்றி அடுத்த நாளே வேலையை உதறித் தள்ளி விட்டு வெளியேறினார். சுதந்திரப் போராட்ட உணர்வை வலுவாக எடுத்துச் செல்ல கவிதை எழுதுவது, சிறந்த சொற்பொழிவு ஆற்றுவது என பரிணமித்தார். சிவம் பேசினால் சவமும் எழும் என்ற சொல்லாடலுக்கு ஏற்ற தன்னுடைய ஆவேசம் மிக்க பேச்சால் சுதந்திரக் கனலை இளைஞர்களிடம் தொடர்ந்து மூட்டிக் கொண்டே இருந்தார்.
திருவனந்தபுரத்திலிருந்து வெளியேற்றம்
1899 ஆம் ஆண்டு மீனாட்சி என்பவரை திரு மணம் செய்து கொண்டார். திருவனந்த புரத்தில் தர்ம பரிபாலன சமாஜம் என்கிற அமைப்பைத் துவக்கி இளைஞர்களை திரட்டி விடுதலை போராட் டத்தை முன்னெடுத்த மகத்தான பணியில் ஈடுபட்டார். அதைக்கண்டு அஞ்சி நடுங்கிய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அவரை திருவனந்தபுரத்தில் இருந்து உடனடியாக வெளியேற்றியது. அங்கிருந்து வெளியேறிய பிறகு தூத்துக்குடி வந்து வ.உ.சியுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். அதன் மூலம் சுதேசி கீதங்களால் பாரதியாரின் நட்பும் ஏற்பட்டு சுதந்திரப் போராட்டத்தின் மையமாக பாரதியார், வ.உ.சி, சுப்பிரமணியசிவா ஆகியோர் திகழ்ந்தனர். இதே காலகட்டத்தில் தூத்துக்குடியில் கோரல் மில் தொழிலாளர்கள் போராட்டத்தில் வ.உ.சி யுடன் இணைந்து போராட்டக்களத்தில் முன் நின்றார். சென்னை டிராம்வே தொழிலாளர் வேலை நிறுத்தம், மதுரை தொழிலாளர் வேலை நிறுத்தம், கல்கத்தா, தூத்துக்குடி, நெல்லை தொழிலாளர் கள் போராட்டத்திலும் முன்னணி பாத்திரம் வகித்தார். 1920 ஆம்பூர் கிலாபத் மாநாடு, விழுப்புரம் அரசியல் மாநாடு, புதுக்கோட்டை சமஸ்தான மன்னருக்கு எதிராக புதுக்கோட்டை டவுண் ஹால் கூட்டம், 1923 சாத்தூர் அரசியல் மாநாடு ஆகியவற்றில் பங்கேற்று தனது ஆவேசமிக்கப் பேச்சால் மக்களை விடுதலை போராட்டத்திற்கு உந்தித் தள்ளினார்.
எளிய மக்களே பூசாரி...
சுப்பிரமணிய சிவாவின் வரலாற்றைப் படிக்கிற எவரொருவரும் அவர் ஆன்மிகவாதி என்ற போதிலும் ஒருபோதும் பிற மதத்திற்கு எதிராக செயல்பட்டதில்லை என்பதை புரிந்து கொள்ள முடியும். அவர் கடைசிக் காலத்தில் தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் பாரத மாதா கோயில் கட்ட முயற்சி எடுத்தார். அந்தக் கோயிலில் அனைத்து மதத்தவரும் வழிபடலாம் என்றும் அந்தக் கோயிலில் உயர் சமூகத்தைச் சேர்ந்த பிராமணர்கள்தான் பூசாரியாக இருக்க வேண்டும் என்பதற்கு மாறாக சாதாரண ஏழை எளிய மக்களே அதில் பூசாரியாக பணியாற்று வார்கள் என்றும் அறிவித்தார். விடுதலைக்காகப் போராடிய காரணத்தி னால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் ராஜ துரோக குற்றம் சாட்டப்பட்டு 1908 மார்ச் 12-ல் சிறையில் அடைக்கப்பட்டார். 5 ஆண்டுகாலம் கடும் சித்ர வதைக்குப் பிறகு 1912 நவம்பர் 2 அன்று சிறையிலி ருந்து விடுதலை செய்யப்பட்டார். விடுதலை அடைந்ததும் சென்னைக்குச் சென்றார். தனது எழுச்சி உரையால் இந்திய நாட்டின் இளைஞர்களை விடுதலைப் போராட்டத்தின் பால் ஈர்க்கவும் தனது பேச்சால் அவர்களை எழுச்சி கொள்ளவும் செய்த சுப்பிரமணிய சிவா மீண்டும் 1921 நவம்பர் 17 -ல் கைது செய்யப்பட்டார். சிறையில் கொடும் சித்ரவதைகளை அனுப வித்தது மட்டுமல்லாமல் உடல்நிலை குன்றி தொழு நோயால் பாதிக்கப்பட்டார். படுத்த படுக்கையாக இருந்த சுப்பிரமணிய சிவாவை 1922 ஜனவரி 12 அன்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் விடுதலை செய்தது.
நடந்தே சென்று...
தொடர்ந்து தன்னுடைய உடல் நலம் குன்றிய நிலையில் தொழுநோயால் பாதிக்கப்பட்டி ருப்பதால் அவர் பேருந்துகளிலும் ரயில்களிலும் பயணிக்க பிரிட்டிஷ் ஏகாதிபத்தி யம் அனுமதி மறுத்தது. தனக்கு எத்தகைய கொடுமைகள் நேர்ந்தாலும் இந்த தேசத்தின் விடுதலைக்காக போராடுவது மட்டுமே தன்னுடைய லட்சியம் என கருதி தன்னை ஒரு சாக்கு மூட்டைக்குள் கட்டிப் போடச் சொல்லி பேருந்துகளிலும் ரயில்களி லும் ஏறி ஊர் ஊராக சென்று விடுதலைப் போராட்டத் திற்கான எழுச்சிமிக்க உரையை நிகழ்த்தினார். சென்னை மயிலாப்பூரில் வசித்த காலத்தில் மாலை நேரம் ஒரு நாற்காலி, ஒரு விளக்கு, ஒரு மேஜையை தூக்கிக்கொண்டு கடற்கரைக் குச் சென்று மேஜையின் மீது ஏறி வந்தே மாதரம் என்கின்ற முழக்கத்தை உரக்கச் சொல்லி ஆவேச மிக்க விடுதலை உரையை கடற்கரை யில் நிகழ்த்தியிருக்கிறார் சுப்பிரமணிய சிவா. இதன் மூலம் தமிழகத்தில் இந்தியாவில் அன்றை க்கு மாணவர்களையும் இளைஞர்களையும் ஆவேசம் கொண்டு சுதந்திரத்திற்காகப் போராடு வதற்கான உந்து சக்தியாக திகழ்ந்துள்ளார். 1906-ல் பிரிட்டிஷ் கர்சன் பிரபு வங்காளத்தை இரண்டாகப் பிரித்து இந்து முஸ்லிம்களிடையே கலவரத்தைத் தூண்டி விட்டான். இந்த வேற்று மைக்கு எதிராக இந்திய நாடு முழுவதும் சுதேசி எழுச்சியை நாடு கண்டது. அன்றைக்கு மக்கள் ஒற்றுமைக்காக தமிழகம் முழுவதும் வ.உ.சி, பாரதியார் ஆகியோருடன் இணைந்து சுப்பிரமணிய சிவாவும் களத்தில் நின்று பணியாற்றினார்.
பத்திரிகையாளர்
மக்களிடையே சுதந்திரக் கனலை மூட்ட1913ல் ஞான பானு என்ற மாத இதழையும் பிறகு பிரபஞ்ச மித்திரன் என்ற வார இதழையும் தொடங்கி தொடர்ந்து கட்டுரைகளை நாரதர் என்கின்ற புனைபெயரில் போலீஸ் கெடுபிடிக்கு மத்தியில் எழுதி வந்தார். 1919ல் இந்திய தேசாந்திரி என்கிற வார பத்திரிகையும் நடத்தி வந்தார். சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா வின் நினைவாக தருமபுரி பாப்பாரப்பட்டியில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இவர் பிறந்த ஊரான வத்தலக்குண்டில் அங்குள்ள பேருந்து நிலையத்திற்கு சுப்பிரமணிய சிவா என பெயர் சூட்ட வேண்டுமென 1987-ல் நடைபெற்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தனது திண்டுக்கல் மாவட்ட இரண்டாவதுமாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றி அதற்காக தொடர்ச்சியா னப் போராட்டத்தை நடத்தியது.இதன் விளைவாக தமிழக அரசு வத்தலக்குண்டு பேருந்து நிலை யத்திற்கு சுப்பிரமணிய சிவா நினைவு பேருந்து நிலையம் என பெயர் சூட்டியது. தர்மபுரி பாப்பாரப்பட்டியில் சுப்பிரமணிய சிவா வாழ்ந்த வீட்டை அரசு கையகப்படுத்தி மக்கள் பார்வைக்கு அனுமதிக்க வேண்டும். அவர் பயன் படுத்திய பொருட்கள், கடிதங்கள், அவர் உருவாக்கிய பாரத மாதா சிலை ஆகியவை சில தனி நபர்களிடம் இருப்பதாக கூறப்படுகிறது. இதை அரசு கையகப்படுத்தி சுப்பிரமணிய சிவா வின் மணிமண்டபத்தில் மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். அவரது தியாகத்தை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு செல்வது காலத்தின் கட்டாயம்.
கட்டுரையாளர் : மாநில துணைச் செயலாளர்,
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்